இந்தியாவில் மட்டும் 16 மில்லியன் போலி இன்ஸ்டாகிராம் கணக்குகள் உள்ளதாகவும், அதன் மூலம் பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை விளம்பரம் செய்து, மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஒரு ஆன்லைன் நிறுவனம் இன்ஸ்டாகிராம் தளத்தில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வரும் கணக்குகள் குறித்து ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இ-காமர்ஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ’எ குட் கம்பனி’ மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனமான ’ஹைப் ஆடிட்டர்’ ஆகியவை இணைந்து 82 நாடுகளில் உள்ள 1.84 மில்லியன் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 49 மில்லியன் போலி கணக்குகள் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் 27 மில்லியன் போலி கணக்குகள் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி வருவது தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 16 மில்லியன் போலி கணக்குகள் மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் போலி கணக்குகள் மூலம் நிறுவனங்களுக்கு 750 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அத்துடன் இன்ஸ்டாகிராமில் இந்தச் செல்வாக்கு மிக்க போலி கணக்குகள் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகள் மட்டும் 2 பில்லியன் டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.